பால்வினையாளி
அரசனின் கட்டளையுடன் வந்த ஆடவனைச் சேராத
கணிகை ஆயிரம் கசையடிக்கு ஆளாதல் வேண்டும் அல்லது
ஐயாயிரம் பணம் தண்டமிறுத்தல் வேண்டும்.
-கௌடில்யர்(அர்த்தசாஸ்திரம்)
ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும்
ஏற்கனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம்
செய்தாயிற்று.
- பைபிள்
பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழி இயற்று
- திருக்குறள்
விபசாரம் புரிந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான
தண்டனையாக தலா நூறு கசையடிகள்
கொடுக்கப்படவேண்டும் .
- திருக்குர் ஆன்
கவிதை :-
* உட்கார்
பெயர் சொல்
பெண்ணே.......
அப்பா அம்மா இட்டது
மகாலட்சுமி
மாமா சூட்டியது
சுகப்பிரியா
*தொழில்?
உலகின் மிகப் பழைய
தொழில் .
ஆறு வருடமாய்ப்
பதினாறு.
* எடை.....?
எடை பார்க்கும் எந்திரம்
எடை பார்ப்பதில்லை.
வறுமைக்கோட்டில்
தலை தட்டும் உயரம்
மாறிக்
கொண்டேயிருக்கும்
எது காரணம் ?
செல்வத்தின் எச்சமும்
வறுமையின் உச்சமும்
*. இதில் சகிக்க முடியாதது..?
இங்கேவந்து வீடு நினைந்து
ஆண்கள் சிலபேர் அழுவது
மீண்டும் சந்திப்போம்
* இலக்கியப் பரிச்சயம் ....?
குறள்கூட ஒன்று சொல்வேன்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
உச்சத்தார் காணப் படும்.
கருப்பையைப் பட்டினியிட்டாய்...?
சில உறுப்புகள் அனாவசியம்
குடல்வால்
இரண்டாம் கிட்னி
ஆறாம் விரல்
எனக்குக் கருப்பை
திருமணம்- எய்ட்ஸ்
இரண்டிலொன்று முந்தும்வரை
********
பூமியின் மீதொரு கண்ணீர்த்துளி
முதல் விலைமகள் அழுததுளி
சாத்திரம் மதம் சட்டம் இலக்கியம்
எல்லா விரல்களும் துடைக்கப்போய்
ஆசிர்வதித்த அதே துளி
முட்டையிட்டு முட்டையிட்டுக்
கடலாய்ப் பல்கிய கண்ணீர்த்துளி
மாறும் உலகில்
மாறாத ஒன்றாய்...
மாதவி மகளொருத்தி
கண்ணகியானால்
கண்ணகி மகளொருத்தி
மாதவியாய்....
********
மீண்டும்
ஈரம் சேராத முத்தம்
மூலம் சேராத தழுவல்
ஒட்ட வைத்த புன்னகை
ஒலிப்பதிவுப் பேச்சு
அவரவர் தேவை தீர்ந்தும்
அவள் தேவை தீராத வெறுமை
சிகரெட் வாசனை கழிய
சற்றே திறந்த ஜன்னல்வழி கசியும்
'பெண்ணுரிமை கோஷங்கள் '
ஜன்னல் இழுத்தடைத்துத்
தயாராகிறாள்
இன்னொரு பந்திக்கு
இலை கழுவ. .......